விடை தெரியா கேள்வி

நதிகளுக்கெல்லாம் எங்கள் பெயர் 
அணைகட்டி தடை செய்ய 

தெய்வங்களாக்கி பூஜைகள் தினமும் 
கருவறைக்குள் சிறைவைத்து பூட்டிட 

பூக்களுடன் ஒப்பிட்டு மென்மையாக்கினர் 
புயல்காற்றின் வலிமை அறியாதிருக்க 

நாங்கள் செய்த தவமெல்லாம் 
யாரோ கலைத்துச் செல்ல 

வரங்களாய் வந்தவை எல்லாம் 
சாபங்களாய் மாறித்தான் போயினவே 

காலங்கள் போயின காற்றாய் 
கனவுகள் போயின கானலாய் 

எங்கள் வாழ்வும் நகர்கிறது 
ஒற்றையடி பாதை முட்களுடன் 

பிறப்போ இறப்போ எதுவாயினும் 
பிரியாமல் தொடரும் சோகம் 

பிறப்பைக் கொடுக்கும் எங்கள் 
பிறப்பும் தடைசெய்யப் பட்டதாய் 

தாயாய் தமக்கையாய் மனைவியாய் 
சேயாய் வாழ்ந்தே தேய்கின்றோம் 

நாங்களென்ன விடியாத இரவா 
இருட்டில் மட்டுமே வாழ

 

 

--பிரியா