அமிலம் தொட்ட மலர்கள்

தொடர்ந்தே வருகிறது 
வண்டுகள் துளைத்த 
பூக்களின் மரணம் 

சமூகத்தின் எச்சங்கள் 
வரிசையாய் நிற்கின்றன 
அடுத்தது யாரோ 

எழுதி ஓய்ந்து 
அழுகிறது மையும் 
அடக்க வழியின்றி 

முளைத்தெழும் கல்லறைகள் 
வலியுடன் சொல்கிறது 
பெண்ணினத்தின் அவலம் 

எழும்புகின்றன கூக்குரல்கள்
எங்கெங்கும் ஓயாது 
கேட்பவர் தெரிவதில்லை 

எங்கேதான் குற்றம் 
வளர்ந்த சமூகமா?
பிறந்த வீடா?

பாட்டிலும் எழுத்திலும் 
பெண்மையை போற்றியே 
பேருவகை கொண்டோமா? 

எப்போதுதான் புரிவோம் 
வாழும் உரிமை 
எல்லோர்க்கும் உண்டென்று 

யோசிக்கும் கணங்களில் 
அமிலத்தில் கரைகின்றன 
அழகான பூக்கள்

 

 

--பிரியா